செல்வேந்திரன்
THE BEST REVENGE IS LIVING WELL
Thursday, January 19, 2012
மயக்குறு மகள்
வயிற்றில் உதை அதிகம் இருந்தால், பனிக்குடம் உடையும் முன் ரத்தகசிவு ஏற்பட்டால் ஆண் குழந்தைதான் என்றார்கள் உறவினர்கள். இவை நீங்கலாக, என் பூட்டன் அனைந்தபெருமாள் காலந்தொட்டு ஐந்து தலைமுறைகளாக தலைச்சன்பிள்ளை ஆண் என்பது வரலாறு. திருவும் ஒரு ஆண்பிள்ளை பெற்று ஐஸ்வர்யா ராயின் சம்பந்தியாகும் கனவில்தான் இருந்தாள். என் உள்ளுணர்வு மட்டும் ‘மெர்ஸி...மெர்ஸி...’ எனச் சொல்லிக்கொண்டிருந்தது.
கணிப்புகளை, ஊகங்களை, எதிர்பார்ப்புகளை அடித்து நொறுக்கி கடந்த வெள்ளிக்கிழமை (13-01-2012) என் மகள் உதித்தனள் உலகம் உய்ய. வெள்ளிக்கிழமை பெண் பிறப்பது அதிர்ஷ்டம் என நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான் போலிருக்கிறது. அவள் பிறந்த நொடியில் செல் சிணுங்கியது. வெகுநாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருந்த பெருந்தொகை ஒன்று வங்கிக்கணக்கில் வரவாகி இருந்தது. சிங்கப்பூர் செல்லும் பயண தேதிக்குள் கிடைத்துவிடுமா கிடைக்காதா என இழுபறி நிலையிலிருந்த பாஸ்போர்ட்டை போஸ்ட்மேன் தேடி வந்து கொடுத்துச் சென்றார்.
***
பெர்த் சூட் எனப்படும் அறையினை தெரிவு செய்தால், பிரசவத்தின் போது கணவனை உடனிருக்க அனுமதிக்கிறார்கள். அதற்கென கட்டணமுண்டு. மனைவி படும் அவஸ்தைகளை காசு கட்டியா ரசிப்பது?! நெருப்புக்குண்டத்தின் மேல் நின்ற உணர்வெனக்கு. பெர்த் சூட்டுக்குள் நிற்கும் எந்த ஒரு கணவனும் இதற்கு மேல் பிள்ளைகள் தேவையில்லை என முடிவெடுத்துவிடுவான். அவள் வலியில் பங்கெடுத்துக்கொள்ள முடியாத பெரும் குற்றவுணர்ச்சியும் சூழ்ந்துவிடுகிறது.
கத்தலும், கதறலும், துள்ளலும், துடிப்பும் வலிமறப்பான் ஊசியை போடும் வரைதான். நவ விஞ்ஞானம் வலிகளற்ற பிரசவத்தினை சாத்தியமாக்கி இருக்கிறது. டாக்டர்களும், நர்சுகளும் புடை சூழ நின்று திருக்குறள் அரசி எனும் பெயரை கேலி செய்து, ‘எங்கே ஒரு திருக்குறள் சொல்லுங்க பார்ப்போம்...பாப்பா கேட்கட்டுமெனச் சொல்ல...’ திரு சிரித்துக்கொண்டே, தனக்குத்தெரிந்த ஒரே குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ சொல்லி முடிப்பதற்குள் பாப்பா பிறந்துவிட்டாள்.
சிரிப்பும், கேலியுமான சுகப்பிரசவம்.
***
கருவுற்றதும் திரு செய்தியாளர் பணியினை ராஜினாமா செய்தாள். வீட்டு வேலைக்கு வைத்திருந்த பெண்ணை நிறுத்திவிட்டு, தானே வேலைகளைச் செய்யத் துவங்கினாள். மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தாள். பத்து மாதங்களில் ஒரிரு நாட்கள்தான் என்னால், அவளை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.
டாக்டர் கீதா அர்ஜூன் எழுதிய நூல் மிகுந்த உதவிகரமாக இருந்தது. யூ ட்யூபில் ஏராளமான பேறுகால வீடியோக்கள் காணக்கிடைத்தன. அவை பிரசவம் குறித்த அர்த்தமற்ற பயத்தினை களைந்தன. மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் வழங்கிய அறிவுரைகளைக் கறாராக கடைப்பிடித்தாள்.
பைத்தியக்கார சீரியல்களை அறவே புறக்கணித்தாள். கருவுற்ற காலங்களில் ஆழி சூழ் உலகு; கன்னி; அறம் போன்ற பெரிய புத்தகங்களைப் படித்து முடித்தாள். வீட்டில் முடங்காமல் கோவையில் நடந்த பொதுநிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டாள். குடும்ப விழாக்களிலும் தவறாமல் ஆஜர். இடையில் கொஞ்ச நாட்கள் ஊர்த்திருவிழாவிற்கும் போய் வந்தோம். பத்து மாதங்களும் வாந்தி, தலைசுற்றல் நிற்காமல் தொடர்ந்தது. இடையிடையே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டி இருந்தது.ஆனாலும், எப்போதும் உற்சாகமான மனநிலையிலேயே இருந்தாள்.
தோழமைகள் என்னைக் காட்டிலும் திருவை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பதார்த்தங்களோடு நண்பர்கள் பார்க்க வராத நாளே இல்லை. அவர்களது யோசனைகளும், அனுபவங்களும் பல சந்தர்ப்பங்களில் உதவிகரமாக இருந்தன.
***
ரத்தக்கசிவு ஏற்பட்டபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். உயிர்நண்பர் கபிலமாறன் திருவை ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தகவல் கொடுத்தார். பேய் வேகத்தில் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள். நண்பர்கள்.
‘பணம் எவ்வளவு வேணும்?!’, ‘துணைக்கு அம்மாவை அனுப்பி வைக்கிறேன்’, ’நான் கிளம்பி வர்றேன்’, ‘பேமிலி டாக்டரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பறேன்’, ‘சிசேரியன்னா பிளட் கேப்பாங்க...பதட்டப்படாதே நான் கொடுக்கிறேன்...’ இன்னும் என்னென்னவோ கேள்விகள். இந்த மருத்துவமனை தினங்களில் ஒருவேளை உணவு கூட கேண்டீனில் சாப்பிடவில்லை. முறைவைத்துக்கொண்டு எடுப்புச்சாப்பாடு வந்துகொண்டே இருந்தது.
தைப்பொங்கலன்று டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். கபிலமாறன் பொங்கல் கொண்டாட்டங்களைப் புறக்கணித்து முழுதினமும் என்னோடே இருந்தார். திருவையும், குழந்தையையும் திருப்பூரில் தாய்வீட்டில் சேர்ப்பித்து, தொட்டில், கொசுவலை, பெட் இன்னபிற சமாச்சாரங்களை சேகரம் செய்து ஊர் திரும்புபோது நள்ளிரவு தாண்டிவிட்டது.
சசிக்குமாரும், சமுத்திரக்கனியும் தங்கள் படங்களில் நட்பைச் சிலாகிக்கும்போது கொஞ்சம் ‘எக்ஸாகிரெட்’ பண்ணுகிறார்களோ எனத் தோன்றும். தலையிலடித்துக்கொள்கிறேன். என் நெஞ்சு விம்மி, கண்கள் பனிக்க சொல்கிறேன் ‘இக்கட்டான தருணங்களில் உறவுகள் ஓடிவிடும்; நண்பன் கூடவே இருப்பான்’
***
மொத்த சேல்ஸ் டீமும் நாட்கணக்கில் இரவும் பகலும் உழைத்தாலன்றி கரையேற முடியாததொரு நெருக்கடியான அலுவலக சூழலில்தான் திருவிற்கு பிரசவ வலி வந்தது. எனக்காக அலுவலக தோழர்கள் சுமையினைப் பகிர்ந்துகொண்டார்கள். நான் விடுப்பிலிருந்த நான்கு தினங்களும் அவர்கள் என்பொருட்டு நள்ளிரவு இரண்டு மணி, மூன்று மணி வரை அலுவலகத்தில் உழைத்தார்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத தோழமைகள்.
***
பாப்பா அப்போதுதான் பிடுங்கி, கழுவிய ஊட்டி கேரட்டினைப் போல் இருக்கிறாள். மூன்று கிலோ பஞ்சுப்பொதி. அம்மாவையே வார்த்த ஜாடை. முதல் மூன்று தினங்கள் அவள் அழவே இல்லை. பால் வெள்ளைக் கண்களை உருட்டி, உருட்டி முளித்துக்கொண்டிருந்தாள். முகத்தருகே குனிந்து ‘பாப்பா’என வாஞ்சையாக அழைத்தால் மெள்ள சிரிக்கிறாள். டேலியா பூத்தது போலிருக்கிறது.
திருவிற்கு இப்போதுதான் ஒரு பெரிய மனுஷி தோரணை வந்து சேர்ந்திருக்கிறது. ‘எருமை மாட்டிற்கு மான்குட்டி எப்படி பிறந்தது?!; தங்கச்சிலை வடிவமைப்பாளர்;’ என்றெல்லாம் பெண்பிள்ளைகளின் தகப்பன்களை பிராயத்தில் கேலி செய்து திரிந்திருக்கிறேன். திரு அவ்வரிகளை ஞாபகமூட்டி கேலி செய்கிறாள்.
***
இரண்டு நாட்கள் கூட இருவரையும் பிரிந்திருக்க முடியவில்லை. நானே பார்த்துக்கொள்கிறேனென நேற்று திருப்பூரிலிருந்து இருவரையும் அழைத்து வந்துவிட்டேன். தங்கவளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள் வரவேற்கப்படுகின்றன :)
Thursday, January 5, 2012
முடியலத்துவம்
Saturday, December 31, 2011
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
Thursday, December 29, 2011
அறிவினில் உறைதல்
தலைமையாசிரியருக்கு நல்ல தமிழ்ப்பெயர். அவரது அப்பா திமுககாரனாக இருக்கக்கூடும் என உத்தேசித்தேன். அவர் ஆச்சர்யப்பட்டார். மேஜையில் பாலகுமாரனின் பொன்வட்டில் இருக்கக்கண்டேன். வரலாற்று நாவல் பிரியராக இருக்கக்கூடும் என மூளை சொன்னது. கல்கி, சாண்டில்யன், கடல்புறா, சிவகாமி சபதமென பேச்சை வளர்க்க வளர்க்க அவர் ஆர்வமானார். என்னிடம் சாண்டில்யன் விகடனில் எழுதியதெல்லாம் அந்தக் காலத்து பைண்டிங் வெர்ஷனாகவே இருக்கிறது. யார் தலையில் கட்டலாமென நெடுநாட்களாக ஆள் தேடிக்கொண்டிருந்தேன். அவருக்கு சாண்டில்யனின் கத்திச்சண்டைக் கதைகளை பரிசளிக்கிறேன் எனச் சொன்னேன். பூரித்துப் போனார்.
மெள்ள நான் வந்த நோக்கத்தினை சொன்னேன். கவனமாக கேட்டுக்கொண்டார். அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாவதை கவனித்தேன். சொல்லி முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ‘செல்வேந்திரன் நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்காதீங்க. சின்ன இன்ஸிடெண்ட். அப்புறம் நீங்களே சொல்லுங்க...’ பீடிகையுடன் ஆரம்பித்தார்.
வழக்கமா காலையில 11 மணிக்கு ஒரு ரவுண்ட்ஸ் போறது என் வழக்கம். க்ளாஸ் ரூம்ஸ், லேப், லைபரரி, கிரவுண்டெல்லாம் ஒரு விசிட் அடிச்சிடுவேன். இந்த அகாடமிக் இயர் ஆரம்பிச்ச புதுசு. பதினொன்னாம் கிளாஸ் வாசல்ல பொண்ணுங்க எல்லாம் முட்டிக்கால் போட்டுட்டு இருக்காங்க. மேத்ஸ் குரூப் பொண்ணுங்க. எனக்கு ஷாக். மொத்த க்ளாஸூம் வெளியேதான் இருக்காங்க. ஒரு பொண்ணைக் கூப்பிட்டு என்னம்மா பிரச்சனைன்னு கேட்டேன். ஹோம் ஓர்க் பண்ணல மேடம்... அதான் மிஸ் எல்லாரையும் முட்டி போடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னுச்சி.
உங்களுக்கே தெரியும் செல்வேந்திரன்... பத்தாங்கிளாஸ்ல நல்ல மார்க் எடுத்தவங்களுக்குத்தான் மேத்ஸ் குரூப் கிடைக்கும். நல்லா படிக்கிறவங்களே ஹோம் ஓர்க் பண்ணலன்னா எப்படி?! எல்லாரையும் என் ரூமுக்கு வாங்கன்னு சொல்லி விசாரிச்சேன். ஒரு ஸ்டூடண்ட்ஸூம் வாய் திறக்கல. ஏம்மா என்னம்மா பிரச்சனைன்னு நாடிய தாங்கி நல்லாத்த பண்ணியும் பதிலே வரல. சரி என்கிட்ட நேர்ல சொல்ல கூச்சமா இருந்திச்சுன்னா ஆளுக்கு ஒரு பேப்பர் தர்றேன். உங்க பேர அதுல எழுத வேணாம். ரீசன்ஸ் மட்டும் எழுதுங்கன்னு சொல்லிட்டேன்.
பிள்ளைகளும் ரீசன்ஸ் எழுதி கொடுத்துட்டாங்க. ஒருத்தி எழுதியிருக்கா ‘கரண்டு இல்ல’; இன்னொருத்தி ‘எங்கூட்ல சண்ட’; இன்னொருத்தி ‘நாட்டு கிலிஞ்சி பேச்சி’; இன்னொருத்தி ‘எனக்கு காச்ச, மண்டவலி’; அதிர்ந்து போயிட்டேன் செல்வேந்திரன். இந்தப் பள்ளிக்கூடத்துல பத்து வருஷம் படிச்ச பொண்ணுங்களுக்கு தமிழ்ல ஒரு வாக்கியம் அட ஒரு வார்த்தை கூட எழுத தெரியலீங்க...கடுப்பாயிட்டேன். இதுல தமிழ்மன்றம், முத்தமிழ் கழகம்னு ஆயிரத்தெட்டு வெட்டிச்செலவுகள். தமிழ் டீச்சரை கூப்பிட்டேன். எட்டுலருந்து பத்துவரைக்கும் அவங்கதான் தமிழ் எடுக்கறாங்க.
நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லல. குனிஞ்சே நிக்கிறாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?! வெளிப்படையா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்னு எவ்வளோ சொல்லிப்பார்த்தேன் பதிலே வரல. சரி கட்ட கடைசிக்கு உங்களுக்கு என்கிட்ட நேர்ல சொல்ல விருப்பம் இல்லண்ணா... ஒரு பேப்பர் தர்றேன். எழுதிக்கொடுங்கன்னேன். அவங்களும் எழுதிக்கொடுத்தாங்க.
‘நா ஒளுங்காத்தான் செல்லிக் கெடுத்தேன். எவலும் படிக்கள...’ன்னு இருந்திச்சு. சொல்லி முடித்துவிட்டு என் முகத்தை பார்த்தார். நான் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டினேன்.
Saturday, December 24, 2011
எழுத்துக்கு மரியாதை
Thursday, December 22, 2011
பட்டி தொட்டியெங்கும் பட்டியலடி
பட்டியல் கவிதை எழுதுவது
பாம்புக்கு பேன் பார்ப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பல்புகளை உடைத்து பச்சடி சமைப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பாட்டிக்கு பாலே கற்றுக்கொடுப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
யானையின் கால்களுக்கு ஆடிடாஸ் தெரிவு செய்வது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பூனைக்கு பாஸ்போர்ட் எடுப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
ஜக்கி வாசுதேவுக்கு ழகரம் சொல்லிக்கொடுப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பத்திரத்தை படித்து புரிந்துகொள்வது போல
பட்டியல் கவிதை எழுதுவது
ராகுல்காந்திக்கு பெண் பார்ப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
எம்.எல்.எம் ஆசாமியிடம் இலக்கியம் பேசுவது போல
பட்டியல் கவிதை எழுதுவது
லேவாதேவிக்காரியைக் காதலிப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பெண்பிள்ளைகளுடைய எதிர்வீட்டுக்காரனின் புன்னகை கிடைப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
கல்யாணம் கழிஞ்ச நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
மரவட்டைக்கு மலைப்பாம்பின் சட்டையை அணிவிப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பேச்சுப்போட்டிக்கு மன்மோகனை நடுவராக இருத்துவது போல
பட்டியல் கவிதை எழுதுவது
வீட்டுக்கடன் கிடைப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பட்டி டிங்கரிங் பார்ப்பது போல
பட்டியல் கவிதை எழுதுவது
பட்டாயாவில் பஞ்சாமிர்தம் விற்பது போல
ஒரு நக்கல் சிரிப்பு
ஒரு மொன்னை கத்தி
ஒரு முருங்கைக்காய்
ஒரு டயாப்பர்
ஒரு அனால்ஜின்
ஒரு எஸ்.எம்.எஸ்
பட்டியலுக்கு போதுமானதாயிருக்கிறது
சிறு தும்மல்
சிறு கதறல்
சிறு பிளிறல்
சிறு கமறல்
சிறு உதறல்
சிறு சலம்பல்
பட்டியலுக்கு காரணமாயிருக்கிறது
சின்ன பலப்பம்
சின்ன கரித்துண்டு
சின்ன செங்கல்
சின்ன நாமக்கட்டி
சின்ன ஆணி
சின்ன பிரஷ்
பட்டியலுக்கு வேண்டியதாயிருக்கிறது
பெரும் நப்பாசை
பெரும் பதட்டம்
பெரும் உஷ்ணக்கடுப்பு
பெரும் நெஞ்செரிச்சல்
பெரும் பவுத்திரம்
பெரும் கொலவெறி
பட்டியலுக்கு தேவையாயிருக்கிறது
பட்டியல் ஒரு சமகால சீற்றம்
பட்டியல் ஒரு சமகால அவஸ்தை
பட்டியல் ஒரு சமகால துர்கனவு
பட்டியல் ஒரு சமகால சைத்தான்
பட்டியல் ஒரு சமகால சரவல்
பட்டியல் ஒரு சமகால சங்கடம்
பட்டி
தொட்டியெங்கும்
பட்டியலடிப்போம்!
(மாதாமாதம் 15 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு மரங்களின் தியாகத்தை அர்த்தப்படுத்தும் சமகால பட்டியல் உச்சத்திற்கு சமர்ப்பணம்)
Sunday, December 11, 2011
கிளப்புல மப்புல
Saturday, December 10, 2011
அன்புடன் அழைக்கிறேன்
Sunday, November 20, 2011
அறம் வெளியீடு - ஈரோட்டில்...
Wednesday, November 2, 2011
எத்தியோப்பிய சிங்கம்
“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு.”
***
1974ல் எழுத்தாளர்கள் மாநாட்டிற்காக அமெரிக்காவின் அயோவா சிட்டிக்குப் பயணிக்கிறார் அசோகமித்திரன். கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஜாகை அங்கே. அமெரிக்க வாழ்வும், சந்திக்க நேர்ந்த மனிதர்களும்தான் ‘ஒற்றன்’. ஒவ்வொரு அத்தியாயங்களும் தனித்தனியாக ஒரு சிறுகதையின் அனுபவத்தை தரக்கூடியது. ஒட்டு மொத்த வாசிப்பில் தனித்துவமான நாவலாக உருப்பெறும். அசோகமித்திரனின் ஆல்டைம் பெஸ்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் படைப்பு.
ஒற்றன் எனும் தலைப்பிற்கு காரணமாக அமைந்தவர் அபே குபேக்னா எனும் எத்தியோப்பிய எழுத்தாளர். 27 நாவல்களுக்கு மேல் எழுதி அவரது நாட்டில் பெரும்புகழ் மிக்கவராக திகழ்ந்தார். எத்தியோப்பியாவில் அப்போது மன்னராட்சி நிலவியது. மன்னனின் மகனுக்கு நெருங்கிய நண்பராக அபே இருந்தார். தனது சமீபத்திய நாவலான ஒற்றனை பல்கலை பேராசிரியர் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.
அபே குபேக்னா அயோவாசிட்டி எழுத்தாளர் சந்திப்பில் அசோகமித்திரனைத் தவிர வேறு எவரோடும் நெருக்கம் காட்டாத முசுடு. புதியதாக தைத்த ஒரு கோட்டினையே சதாசர்வ காலமும் அணிந்துகொண்டு வளைய வருபவர். சுத்தமாய் இருப்பதில் அவநம்பிக்கையும், குடிப்பதில் ஆர்வமும் கொண்டவர். ஏனோ எல்லோர் மீதும் கண்மூடித்தனமான கசப்புணர்ச்சி. கஜூகோ எனும் அழகிய ஜப்பானிய பெண் எழுத்தாளரோடு நெருங்கிப் பழகும் துடிப்பு அபேவுக்கு உண்டு. ஆனாலும், குபேக்னாவின் எண்ணம் ஈடேற வில்லை. அபேயின் பெயரைக் கேட்டாலே கஜூகா கரித்துக்கொட்டுவாள். இருவருக்குமான சந்திப்பில் ஏதோ ஒரு கசப்பு நிகழ்ந்திருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக கஜூகோ அசோகமித்திரன் மீது மிகுந்த அன்பாக இருந்தாள். இது குபேக்னாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. கஜூகாவுடன் தனக்கு இடைவெளி ஏற்பட அமிதான் காரணம் என நினைக்கிறார். உச்சகட்டமாக ஒரு நாள் அசோகமித்திரனை அவர் விழத்தள்ளி அடித்தும் விடுகிறார். சில நாட்களில் அபே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், அயோவாசிட்டியை விட்டு வெளியேறி விடுகிறார்.
சில நாட்களில் எத்தியோப்பியாவில் புரட்சி எனும் செய்தி மட்டும் அசோகமித்திரனை வந்தடைகிறது. தனது நண்பன் குபேக்னா என்னவானார் எனும் கவலையோடு அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் அசோகமித்திரன். முற்றிலும் நெகட்டிவாகவே நடந்துகொள்கிற குபேக்னா மீது நமக்கு எள்ளளவும் எரிச்சல் வராது. மாறாக பரிதாபமும், கழிவிரக்கமுமே உண்டாகும். ஆம், நாம் குபேக்னாவை அசோகமித்திரனின் இதயத்தின் வழியாகவே பார்க்கிறோம். இயல்பிலேயே எத்தியோப்பியா எனும் சபிக்கப்பட்ட தேசத்தின் மீது பொங்கும் பாசமும், குபேக்னாவின் தாழ்வுணர்ச்சியும், அவநம்பிக்கையும் நமக்கு பரிவை உண்டாக்குகிறது.
***
குபேக்னா என்னவாகியிருப்பார்?! இப்போது அவருக்கு என்ன வயதிருக்கும்?! எத்தியோப்பியாவில் என்ன செய்துகொண்டிருப்பார்?! எனும் சிந்தனையிலேயே உறங்கிப்போய்விட்டேன். விடிந்ததும் இணையத்தில் குபேக்னாவைக் குடைந்துகொண்டிருந்தேன். எத்தியோப்பிய அரசின் வீழ்ச்சிக்குப் பின் சில வருடங்களிலேயே குபேக்னா இறந்து விட்டார். அவரது ஒரிரு நாவல்கள் எத்தியோப்பியாவில் தடை செய்யப்பட்டன. அவரது ஆசைப்படி ஒற்றன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகி இருந்தது. அவரது நாவல்கள் தற்போது பெரிதாக வாசிக்கப்படவில்லை. ஆனால், அபே குபேக்னாவின் வரிகள் இன்று உலகம் முழுவதும் ஒரு பிரபலமான சொல்லாடலாக, உத்வேகமூட்டியா, தன்னம்பிக்கையளிப்பதாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது... அவ்வரிகள்
“ஆப்பிரிக்க காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்தைவிட அதிவேகமாக அது ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானை விட அது வேகமாக ஓட வேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.
நீ சிங்கமோ மானோ சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு.”