நானும் கேண்டியும் சனி, ஞாயிறுகளில் சினிமா, ஷாப்பிங் போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விடுவோம். ஜனத்திரளில் அல்லாட பிடிக்காது. மாறாக, நண்பர்கள் வீட்டிற்கு திடீர் விசிட் அடிப்போம்.
அப்படிச் செல்லும்போது, ‘வந்துகொண்டிருக்கிறோம்’ என தகவல் கொடுப்பதில்லை என்பது பாலிசி மேட்டர். முன்னரே சொல்லிவிட்டால் சிக்கன் பிரியாணி, காலிபிளவர் சில்லி, குலோப் ஜாமூன் போன்ற ஆஞ்சியோ சமாச்சாரங்களை செய்து வைத்திருப்பார்கள். தவிர்க்கவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது.
முன்னறிவிப்பு இல்லாமல் செல்கையில் மிஞ்சிய ரசத்தை, மீதமான பொரியலை, லேசாக புளித்த மாவில் வெங்காயத்தை அரிந்து போட்டு சுட்ட அதிரடி பணியாரத்தை அல்லது அவசர உப்புமாவைச் சாப்பிட்டு விட்டு நெஞ்சு கரிக்காமல் வீடு திரும்பலாம். பெண்கள் விரைவாக அல்லது பதட்டமாக சமைக்கும் போது உபத்திரவம் இல்லாத உணவுகளைச் சமைப்பார்கள் என்பது என் அபிப்ராயம்.
பரிசு பொருட்கள் தர்மசங்கடத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்பது இன்னொரு வசதி. சட்டை பிட்டுகள், புடவை, அலங்கார பொருட்கள் துவங்கி ஐபாடு வரை அவரவர் வசதிக்கேற்ப வாங்கி வைத்து இருப்பார்கள். எவருக்கும் திருப்பி செய்யும் வசதியான நிலையில் நாங்கள் இல்லாததால் இதுமாதிரி பொருட்கள் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதில் அதிர்ச்சியைத் தந்துவிடும்.
கேண்டி சட்டென்று எவருடனும் ஒட்டிக்கொள்வாள். வீட்டிற்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில், ‘தாளிசம் பண்ணிட்டா மீனைப் போடுவீங்க... பச்சை வாசம்லா வரும். ஒரு கொதி வந்ததுக்கப்புறம் ஒண்ணு ஒண்ணா உண்டியல்ல காசு போட மாதில்லா போடனும்’ என திருநெல்வேலியிலே பிறந்தவளாட்டம் பெண்களுக்கு சமையல் குறிப்புகளையும்; பிக்ஸட் டெபாசிட் ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்... கோல்டு இ.டி.எஃப்ல இன்வெஸ்ட் பண்ணுங்க என ஆண்களுக்கு நிதி ஆலோசனைகளையும் அள்ளி வீசிக்கொண்டிருப்பாள்.
போகிற வீடுகளில் எனக்கென்று ஒரு பெருசு காத்திருக்கும். பேச்சுத்துணைக்கு யார் கிடைப்பாரென ஏங்கிப்போயிருக்கும் அவர்களோடு பட்டறையைப் போடுவதில் எனக்கு அலாதி ஆனந்தம். நல்ல கேலி, சுவாரஸ்யமான தகவல், கேட்டிராத சொலவடை இவற்றோடு சில அனுபவ வழிகாட்டுதல்கள் கிடைப்பதோடு பாட்டன், பூட்டன்களோடு மகிழ்ந்து குலாவ வகையற்ற வாழ்முறையில் அஃதொரு பெரிய ஆறுதலும் கூட.
இறைவன், குரு, குழந்தைகள், முதியோர் ஆகியோரை வெறும் கையுடன் சந்திக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். (நவயுகத்தில் இந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) அசல் நெய்யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சாக்கலேட்டுகள், கேக்குகள் போன்றவை விருந்திற்குச் செல்லும்போது வாங்கிச் செல்லும் பொதுவான பொருட்களாக இருக்கிறது. சாக்கலேட்டுகள் குழந்தைகளுக்கும், இன்னபிற இனிப்புகள் சகலருக்கும் கேடு விளைவிப்பவை. பழங்கள் எக்காலத்திற்கும், எவருக்கும் பொருத்தமானவை. ஒருமுறை என் வீட்டிற்கு வந்தவர் காய்கறிகள் கூட வாங்கி வந்திருந்தார். நாங்கள் பொதுவாக நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும்போது கைக்குத்தல் சம்பா அவல், உடன்குடி புதுக்கருப்பட்டி, முரல் கருவாடு, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கோவில்பட்டி வெட்டுக்கடலை மிட்டாய் போன்ற நினைவுச் சாமான்களில் ஏதாவது ஒன்றோடு செல்வோம். என் அக்கா அவளே செய்த உளுந்தங்களி, தட்டை, கடலை பணியாரம், கல கலா, புட்டமுது, கோதுமை அல்வா இவற்றில் ஏதாவது ஒன்றில்லாமல் எவர் வீட்டுக்கும் செல்வதில்லை. கடையில் என்றைக்கோ செய்து வைத்திருக்கும் இனிப்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துக்கொண்டு போவதைக் காட்டிலும் பிரத்யேக அன்பைக் கலந்து செய்து வரும் பலகாரங்கள் என்றென்றைக்குமாக நினவில் வாழும் இல்லையா?!
சரி... இதெல்லாம் இப்போது ஏன் என்கிறீர்களா?! சற்று நேரத்திற்கு முன் சமீபத்தில் திருமணமான பல விருந்துகளைக் காண இருக்கிற நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். எழுதுங்க என்று கேட்டுக்கொண்டதனால்.
(பாகம் - 1 முற்றிற்று)
பாகம் - 2 ஒரு மினி டிரைலர்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்;
உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களே;
அதிதி தேவோ பவ;
செல்விருந்து ஓம்பி வரும் விருந்து பார்த்திருப்பான்;
முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து;
இன்னும் பல சிந்தனைகள் முகிழ்க்க இருக்கின்றன.